அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 06 மணியளவில் இடம்பெற்றது.
விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.
அவர்களுக்கு மூன்று குழந்தைகள் என்று தெரியவருகிறது.
சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது.
அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கிழக்கு மாகாணம், அம்பாறை